அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தினால் நடவடிக்கை பாயும் - வாகன ஓட்டிகளுக்கு கமிஷனர் எச்சரிக்கை

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பயன்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் தெரிவித்தார்.

Update: 2022-06-28 06:12 GMT

சென்னையில் வரும் ஜூலை 3-ந் தேதி வரை ஒலி மாசு விழிப்புணர்வு வாரமாக போக்குவரத்து போலீசார் கடைபிடிக்கிறார்கள். இதையொட்டி நேற்று சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் ஏராளமான நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தனர். ஒலி மாசு விழிப்புணர்வு வாரத்தின் தொடக்க விழா, நேற்று சென்னை அசோக்பில்லர் சிக்னல் அருகே நடந்தது.

போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கலந்துகொண்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர், இணை கமிஷனர் ராஜேந்திரன், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் துணை இயக்குனர் ராஜேந்திரன் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் ஏராளமான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி சென்னை வேப்பேரி சிக்னல் அருகிலும் நடந்தது. கீழ்ப்பாக்கம் போக்குவரத்து போலீஸ் உதவி கமிஷனர் ஜூலியஸ் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர்கள் டேனியல்ராஜ், பாண்டிவேலு ஆகியோர் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பலூன்களை பறக்க விட்டார். வாகனங்களில் விழிப்புணர்வு ஸ்டிக்கர்களையும் ஒட்டினார். மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியபடி சாலை ஓரமாக நின்றனர்.

நிகழ்ச்சி முடிவில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நிருபர்களிடம் கூறியதாவது:-

தற்போது ஒலி மாசு ஏற்படுத்தும் வாகன ஓட்டிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.100 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் நடைமுறைக்கு வந்தால் ரூ.1,000 முதல் ரூ.2 ஆயிரம் வரை அபராத தொகை வசூலிக்க வாய்ப்பு உள்ளது.

அதிக ஒலி எழுப்பும் ஹாரன்களை பொருத்தி இருக்கும் வாகன ஓட்டிகள் மீதும், அது போன்ற ஹாரன்களை பொருத்தி கொடுக்கும் மெக்கானிக்குகள் மீதும் நடவடிக்கை பாயும். இந்த நடவடிக்கை எடுப்பது தொடர்பாக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

முககவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வருகிறது. இதனால் முககவசம் அணிபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்