குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி மூலம் எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

Update: 2022-11-09 19:15 GMT

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து மீனவர்களுக்கு வாக்கி-டாக்கி மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

எச்சரிக்கை

குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக தங்கு கடல் மீன்பிடி தொழிலுக்கு சென்ற மீனவர்களுக்கு கோடியக்கரை மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து 'வாக்கி- டாக்கி' மூலம் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர். எச்சரிக்கையை மீறி அதிராம்பட்டினத்தில் இருந்து செந்தில்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடிக்க கோடியக்கரைக்கு வந்தனர்.

பறிமுதல்

இந்த படகை மீன்வளத்துறை ஆய்வாளர் நடேசராஜா, மீன்வள மேற்பார்வையாளர் விக்னேஷ் ஆகியோர் மற்றொரு படகில் கடலில் விரட்டி சென்று மடக்கி பிடித்து கரைக்கு கொண்டு வந்து படகை பறிமுதல் செய்தனர். படகில் இருந்து என்ஜினையும், 25 லிட்டர் டீசலையும் பறிமுதல் செய்தனர்.

இதேபோல் அறிவிப்பை மீறி கடலுக்கு சென்ற மேலும் 2 மீனவர்களுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

2-வது நாளாக...

மீன்வளத்துறை அறிவிப்பை தொடர்ந்து வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடற்கரையில் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்பதை அறிவிக்கும் வகையில் சிவப்பு கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இதன் காரணமாக 10-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 5 ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் நேற்று 2-வது நாளாக மீன்பிடிக்க செல்லவில்லை. அங்கு கடல் சீற்றமாக காணப்படுவதால் மீனவர்கள் தங்கள் படகுகளை பாதுகாப்பான இடங்களில் நிறுத்தி உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்