ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது - கனிமொழி எம்.பி

ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

Update: 2023-10-30 04:07 GMT

கோப்புப்படம் 

சென்னை,

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து ராயகடாவிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக விஜயநகரம் மாவட்டத்தில் உள்ள ஒரு ரெயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்தது. அப்போது அதே தடத்தில் வந்த பலாசா எக்ஸ்பிரஸ், நின்றுகொண்டிருந்த ரெயில் மீது மோதியது. இந்த பயங்கர விபத்தில் பலாசா ரெயிலின் மூன்று பெட்டிகள் தடம் புரண்டன.

இந்த கோர விபத்தில் 6 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியான நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 13-ஆக அதிகரித்துள்ளது. மேலும் பலர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஒடிசா சம்பவத்தை தொடர்ந்து ஆந்திர ரெயில் விபத்து ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது என்று கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "ஆந்திர மாநிலம் கண்டகப்பள்ளி அருகே ரெயில் மோதி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து கேள்விப்பட்டு சோகமடைந்தேன். சமீபத்தில் ஒடிசா சம்பவத்தைத் தொடர்ந்து நடந்த இந்த சோகம், ரெயில்வே பாதுகாப்பின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்து உள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்