பட்டாசு கடை உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார்.;

Update:2023-09-30 16:49 IST

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசு விற்பனை தற்காலிக உரிமம் பெற ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் தெரிவித்து உள்ளார்.

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பட்டாசு சில்லரை விற்பனை

தீபாவளி பண்டிகை நவம்பர்12-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி பட்டாசு சில்லரை விற்பனை தற்காலிக உரிமம் கோரும் விண்ணப்பதாரர்கள் கடை அமைவிடத்திற்கான சாலை வசதி, கொள்ளளவு, 2 வழிகள், சுற்றுப்புறங்களைக் குறிக்கும் வகையிலான வரைபடம் மற்றும் கட்டிடத்திற்கான நீலவரைபடம் 6 நகல்கள் ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மேலும் கடை வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள இடம் சொந்த கட்டடமாக இருப்பின் அதற்கான ஆவணம், வாடகை கட்டிடமாக இருப்பின் ரூ.20-க்கான முத்திரைத்தாளில் பெறப்பட்ட அசல் வாடகை ஒப்பந்தப்பத்திரம், தற்காலிக உரிமத்திற்கான கட்டணம் ரூ.600-ஐ எஸ்.பி.ஐ. வங்கி மூலம் அரசு கணக்கில் செலுத்தியமைக்கான அசல் சலான், இருப்பிடத்திற்கான ஆதாரம், தற்காலிக பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோரும் கட்டிடத்திற்கான சொத்துவரி ரசீது, விண்ணப்பத்தாரர் புகைப்படம் -2 (பாஸ்போர்ட் சைஸ்) ஆகியவற்றை இணைக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர்கள் பட்டாசுகடை நடத்தும் இடத்தை பொதுமக்களுக்கு எவ்வித சிரமமும் இல்லாமலும், பாதுகாப்பான இடமாக தேர்வுசெய்து ஆட்சேபனை இல்லாத இடத்திற்கு மட்டுமே விண்ணப்பம் அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் மட்டுமே...

ஏற்கனவே கடந்த ஆண்டு உரிமம் பெற்ற நபர்கள் அதே இடத்தில் கடை வைக்க உரிமம் பெற விண்ணப்பம் அளித்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமத்தையும் விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

வெடிபொருள் சட்டம் 2008 விதி எண்.106-ன் படி உரிமத்தின் காலம் 30 நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கூறிய வழிமுறைகளை கடைபிடித்து தற்காலிக பட்டாசு விற்பனை உரிமம் பெற விண்ணப்பத்தாரர்கள் வருகிற 31-ந் தேதிக்குள் இ-சேவை மையங்கள் மூலமாக ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

இந்த தேதிக்கு மேல் ஆன்லைனில் இ-சேவையகங்கள் மூலமாகவும் மற்றும் அஞ்சல் அல்லது நேரடியாகவோ வரும் உரிமம் கோரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும் நிரந்தர பட்டாசு சில்லரை விற்பனை உரிமம் கோருவோர் மற்றும் வருடாந்திர உரிமம் புதுப்பித்தலுக்கு இவ்வழி முறை பொருந்தாது.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்