இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருதுவிண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள்

இயல், இசை, நாடக கலைஞர்களுக்கு விருது பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.;

Update:2023-05-16 00:30 IST

இயல், இசை, நாடக கலைஞர்கள் கலை விருது பெற விண்ணப்பிக்க வருகிற 20-ந் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

சிறந்த கலைஞர்களுக்கு விருது

தமிழ்நாட்டின் கலைப்பண்புகளை மேம்படுத்தவும், கலைஞர்களின் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் மாவட்ட கலை மன்றங்களின் மூலமாக ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2022-23-ம் ஆண்டுகளுக்கு கலை விருதுகள் நாகை மாவட்ட கலை மன்றத்தின் மூலமாக மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளது.

நாட்டுப்புற கலைகள்

எனவே நாகை மாவட்டத்தை சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஓவியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், பாவைக்கூத்து, தோல்பாவை, நையாண்டிமேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் இசைக் கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புற கலைகள், செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடம் இருந்து விருது பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

18 வயது, அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை இளமணி' விருது, 19 வயது முதல் 35 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை வளர்மணி' விருது, 36 வயது முதல் 50 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலைச் சுடர்மணி' விருது, 51 வயது முதல் 65 வயதுக்கு உட்பட்ட கலைஞர்களுக்கு 'கலை நன்மணி' விருது, 66 வயதுக்கும் மேற்பட்ட கலைஞர்களுக்கு 'கலை முதுமணி' விருது வழங்கப்படும்.

கடைசி நாள்

தேசிய விருது, மாநில விருது, மாவட்ட கலை மன்றத்தால் வழங்கப்பட்ட விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது. விருது பெற தகுதிவாய்ந்த கலைஞர்கள் உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மண்டல கயறு வாரியம் அருகில், வல்லம் சாலை, பிள்ளையார்பட்டி, தஞ்சாவூர்- 613403 என்ற முகவரிக்கு வருகிற 20-ந் தேதிக்குள் (சனிக்கிழமை) விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்