இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-09-25 18:45 GMT

வேதாரண்யம்:

நாகை மீனவர்களை தாக்கிய இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகை மீனவர்கள் மீது தாக்கி கொள்ளை

நாகையை அடுத்த செருதூர் கிராமத்தை சேர்ந்த 4 மீனவர்கள் நேற்று சபாபதி என்பவருக்கு சொந்தமான படகில் கோடியக்கரைக்கு தென்கிழக்கே சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர், நாகை மீனவர்களின் படகை சுற்றி வளைத்து படகில் ஏறி மீனவர்களை பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக தாக்கினர்.

பின்னர் நாகை மீனவர்கள் படகில் இருந்த 4 செல்போன்கள், 500 கிலோ வலைகள், 1 ஜி.பி.எஸ். கருவி மற்றும் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள் உள்ளிட்ட ரூ.4 லட்சம் மதிப்புடைய பொருட்களை பறித்துக்கொண்டு அங்கிருந்து சென்றனர்.

கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழக்கு

இதனையடுத்து அவசர, அவசரமாக கரைக்கு திரும்பிய நாகை மீனவர்கள் 4 பேரும் நாகை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக மீனவர் சபாபதி கொடுத்த புகாரின் பேரில் வேதாரண்யம் கடலோர காவல் குழும துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர், இன்ஸ்பெக்டர் ஜோதிமுத்துராமலிங்கம் ஆகியோர், அடையாளம் தெரியாத இலங்கை கடற்கொள்ளையர்கள் 7 பேர் மீது வழிப்பறி மற்றும் ஆயுதங்களால் தாக்குதல் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்