சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் மீண்டும் ஆய்வு...!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் அறநிலையத்துறை அதிகாரிகள் குழு இன்று மீண்டும் ஆய்வு பணியை தொடங்கி உள்ளது.

Update: 2022-08-29 07:24 GMT

கடலூர்,

சிதம்பரம் நடராஜர் கோவிலின் கணக்குகளை ஆய்வு செய்ய இந்து அறநிலையத்துறை முடிவு எடுத்தபோது, கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு குறித்து பொதுமக்களிடம் கேட்ட கருத்துகளின் அடிப்படையில் விளக்கம் அளிக்கக்கோரி தீட்சிதர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இதனையடுத்து நகை சரிபார்ப்புக்கு ஆய்வுக்கு வரும் அதிகாரிகளுக்கு சிதம்பரம் நடராஜர் கோவில் சார்பாக முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்றும் பொது தீட்சிதர்கள் சார்பாக இந்து சமய அறநிலையத்துறைக்கு பதில் அனுப்பி இருந்தனர்.

இதனை தொடரந்து சிதம்பரம் நடராஜர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் 6 பேர் கொண்ட குழு கடந்த 22-ம் தேதி தொடங்கி 4 நாள் ஆய்வு செய்தனர். அதில், சிதம்பரம் நடராஜர் கோவிலில் உள்ள ஆவணங்கள், தங்க நகைகள் மற்றும் கடந்த 2005-2010-ம் ஆண்டுகள் வரையிலான கணக்குகள் விவரங்களை அறநிலையத்துறை அதிகாரிகள் சரிபார்த்தனர்.

இந்த நிலையில், இன்று 5-வது நாள் ஆய்வு பணியை அறநிலையத்துறை அதிகாரிகள் குழு தொடங்கி உள்ளனர். இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பணி மாலை 6.30 மணி வரை நடைபெற்ற உள்ளது. இந்த ஆய்வின் முடிவில் இன்று நடைபெற்ற பணிகள் குறித்த தகவல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்