அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

Update: 2022-06-30 12:35 GMT

ராணிப்பேட்டை காரை கூட்ரோட்டில் உள்ள சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு செய்தார். அப்போது பணியில் இல்லாத ஆசிரியர்கள், அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

திடீர் ஆய்வு

ராணிப்பேட்டை பாரதி நகரில் ரூ.118 கோடியே 40 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பின்னர் அங்கிருந்து ராணிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடைபெற்ற அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவிற்கு காரில் புறப்பட்டார்.

அப்போது காரை கூட்ரோட்டில் சமூக நலத்துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் காப்பகத்திற்கு திடீரென சென்று ஆய்வு மேற்கொண்டார், அப்போது, மாணவர்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தார்.

பாடம் நடத்தும் முறை

மேலும் காப்பகத்தில் உள்ள மாணவர்களிடம் பாடம் நடத்தும் முறை குறித்தும், வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும் கேட்டறிந்தார்.

ஆசிரியர்களிடம் மாணவர்களை உயர்கல்வி கற்க ஊக்குவிக்க வேண்டும் என்றும், அவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

நடவடிக்கை எடுக்க உத்தரவு

காப்பகத்தில் பணியாற்றும் பணியாளர்களின் விவரங்கள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். அப்போது, பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர் மீது விளக்கம் கேட்டு, நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

ஆய்வின்போது நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்