படிக்கட்டில் தொங்கியதை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடி உடைப்பு; 5 பேர் கைது

படிக்கட்டில் தொங்கியதை கண்டக்டர் கண்டித்ததால் மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-31 06:07 GMT

சென்னை பாரிமுனையில் இருந்து மணலி நோக்கி மாநகர பஸ்(தடம் எண் 56 டி) சென்று கொண்டு இருந்தது. பஸ்சில் கண்டக்டராக கொருக்குப்பேட்டையை சேர்ந்த ரஜினி இருந்தார். பஸ்சின் படிக்கட்டில் வாலிபர்கள் சிலர் தொங்கியபடி பயணம் செய்தனர். அவர்களை பஸ்சின் உள்ளே வரும்படி கண்டக்டர் கூறியும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து படிக்கட்டில் பயணம் செய்தனர்.

இதனால் அவர்களை கண்டக்டர் ரஜினி கண்டித்தார். இதனால் அவர்கள், கண்டக்டருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதற்கிைடயே காசிமேடு, சூரியநாராயணன் தெரு, புதுமனைகுப்பம் பகுதியில் பஸ் வந்து கொண்டு இருந்தபோது திடீரென 5 பேரும் பஸ்சில் இருந்து இறங்கி கண்ணாடி மீது கல்வீசி தாக்கினர். இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கியது.

இது குறித்து கண்டக்டர் ரஜினி, காசிமேடு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாநகர பஸ் கண்ணாடியை உடைத்த திருவொற்றியூரைச் சேர்ந்த விக்னேஷ்வரன் (22), சேதுராமன் (21), அரசு (20), மணலியை சேர்ந்த மாதேஸ்வரன் (19) உள்பட 5 பேரை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்