கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை

தக்கலை அருகே கல்லூரி காவலாளி விஷமாத்திரை தின்று தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-10-26 18:45 GMT

தக்கலை அருகே உள்ள முத்தலக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது55). இவர் குமாரகோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காவலாளியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருக்கு செல்லம்மா (53) என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். ராமகிருஷ்ணன் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவந்தார். ஆனாலும், உடல்நிலை சீராகவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக ராமகிருஷ்ணன் மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையில் ராமகிருஷ்ணன் தென்னை மரத்துக்கு பயன்படுத்தும் விஷ மாத்திரையை தின்று விட்டு வீட்டில் மயங்கிய நிலையில் கிடந்தார். இதைகண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி செல்லம்மா, உறவினர்கள் உதவியுடன் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து அவரது மனைவி செல்லம்மா கொடுத்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்