தலைமுடியை வெட்டும்படி பெற்றோர் வற்புறுத்தியதால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை

குன்றத்தூரில் தலை முடியை வெட்டும்படி பெற்றோர் கண்டித்ததால் கிணற்றில் குதித்து கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-02 05:54 GMT

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த கெலடிப்பேட்டை, அண்ணா தெருவை சேர்ந்தவர் செழியன். இவரது மகன் இலக்குவன் (வயது 19), மாங்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியே சென்ற இலக்குவன் வீடு திரும்பவில்லை. தனது மகனை கண்டுபிடித்து தருமாறு குன்றத்தூர் போலீசில் அவரது பெற்றோர் புகார் அளித்தனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வந்த நிலையில் நேற்று அதே பகுதியில் உள்ள கிணற்றில் இலக்குவன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த குன்றத்தூர் சப்-இன்ஸ்பெக்டர் அந்தோணி சகாயபரத் தலைமையில் சென்ற போலீசார் இலக்குவன் உடலை பிரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் இலக்குவன் சில மாதங்களாக தலை முடியை வெட்டாமல் நீளமாக வளர்த்து வந்ததாகவும், அதனை பெற்றோர் கண்டித்து முடியை வெட்டுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரத்தில் வீட்டை விட்டு வெளியேறி அவர், கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது. மேலும், தற்கொலைக்கு வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அதேபோல், ஆவடி அடுத்த கோயில்பதாகை பூம்பொழில் நகர் கங்கை தெருவை சேர்ந்தவர் மனோகரன் (36). இவருக்கு திருமணமாகி சரளா (வயது 28) என்ற மனைவியும், ஒரு மகனும் உள்ளனர். இவரது தாயார் ஜமுனா (55) கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதனால் மனவிரக்தியில் மனோகரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்