766 வழக்குகள் ரூ.28½ கோடிக்கு சமரச தீர்வு
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 766 வழக்குகள் ரூ.28½ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.;
திருப்பூர் மாவட்டத்தில் நடந்த சிறப்பு மக்கள் நீதி மன்றத்தில் 766 வழக்குகள் ரூ.28½ கோடிக்கு சமரச தீர்வு காணப்பட்டது.
தேசிய மற்றும் தமிழ்நாடு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுக்களின் உத்தரவின் பேரில், திருப்பூர் முதன்மை மாவட்ட நீதிபதி ஸ்வர்ணம் நடராஜன் அறிவுறுத்தலின்பேரில், திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள கோர்ட்டு வளாகங்களில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் மொத்தம் 7 அமர்வுகளாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாய நீதிபதி ஸ்ரீகுமார் முன்னிலையில் நடைபெற்றது.மக்கள் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகள் சமரசத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மாவட்ட அளவில் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 2 ஆயிரத்து 387 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதில் 766 வழக்குகள் ரூ.28 கோடியே 51 லட்சத்து 60 ஆயிரத்து 936 மதிப்பில் சமரச தீர்வு காணப்பட்டது. இதில் 248 மோட்டார் வாகன விபத்து வழக்குகள், 68 சிவில் வழக்குகள், 7 குடும்ப நல வழக்குகள், 415 சமரசத்துக்குரிய குற்ற வழக்குகள், 13 காசோலை மோசடி வழக்குகள் உள்ளிட்டவை அடங்கும்.
மக்கள் நீதிமன்ற நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் புகழேந்தி, கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி கார்த்திகேயன், நீதித்துறை நடுவர் முருகேசன், வக்கீல்கள் பழனிசாமி, ரகுபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.