மாவட்ட கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி அணி வெற்றி
மாவட்ட கிரிக்கெட் போட்டி:கோத்தகிரி அணி வெற்றி;
கோத்தகிரி
நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் நாக் அவுட் முறையில் நடத்தப்பட்டு வருகின்றன. நடப்பாண்டில் இந்த போட்டிகள் ஊட்டி மற்றும் கோத்தகிரியில் நடக்கிறது. இதில் நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் ஏ, பி மற்றும் சி டிவிஷன் பிரிவில் பதிவு செய்துள்ள 30 அணிகளில் 21 அணிகள் இந்தப் போட்டியில் பங்கேற்றுள்ளன. போட்டிகள் கடந்த மாதம் 24 ம் தேதி ஊட்டியில் தொடங்கியது. இந்தநிலையில் நேற்று காலை ஊட்டி குட்ஷெப்பர்டு பள்ளி மைதானத்தில் நடந்த போட்டியில் கூடலூர் கிரிக்கெட் அணி மற்றும் கோத்தகிரி காட்டிமா அணிகள் பங்கேற்று விளையாடின. டாஸ் ஜெயித்து முதலில் பேட்டிங் செய்த டான் காட்டிமா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் எடுத்தது. இந்த அணி வீரர்கள் மணிகண்டன் 35 ரன்கள் (அவுட் இல்லை), யஷ்வந்த் குமார் 31 ரன்கள் (அவுட் இல்லை) மற்றும் ஆனந்தராஜ் 32 ரன்கள் எடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து 120 பந்துகளில் 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கூடலூர் அணியால் 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்த அணி வீரர் சசிதரன் அதிகபட்சமாக 36 ரன்கள் எடுத்தார். காட்டிமா அணியின் பந்து வீச்சாளர் ஆனந்தராஜ் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதனால் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.