மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள்

கடலூரில் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில் 1524 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-10-10 18:45 GMT

பள்ளி கல்வித்துறை சார்பில் கடலூர் மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நேற்று நடந்தது. போட்டியை மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ராஜமாணிக்கம், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

அதையடுத்து வயதை அடிப்படையாக கொண்டு 14, 17, 19 என 3 பிரிவாக பிரிக்கப்பட்டு மாணவர்களுக்கு 100 மீ, 200 மீ., 1500 மீ., 3 ஆயிரம் மீட்டர் உள்ளிட்ட ஓட்டப்பந்தயங்கள், நீளம், உயரம் தாண்டுதல், குண்டு, வட்டு, ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு தடகள போட்டிகள் நடந்தது. போட்டியில் குறுவட்ட அளவில் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற 1524 மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு விளையாடினர்.

மாநில போட்டிக்கு தகுதி

இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடித்த மாணவர்கள் காஞ்சீபுரத்தில் வருகிற டிசம்பர் மாதம் நடக்க இருக்கும் மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்ள தகுதி பெற்றனர். நேற்று முன்தினம் மாணவிகளுக்கான தடகள போட்டிகள் நடந்தது. குழு விளையாட்டு போட்டிகள் கடலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களிலும் நடந்து வருகிறது. இதில் இணை ஒருங்கிணைப்பாளர் ராஜராஜசோழன், உடற்கல்வி ஆசிரியர்கள் பிரகாசன், முருகானந்தம், கருப்பையன், தியாகு, நாராயணன், பரணி, தடகள பயிற்சியாளர் மாயகிருஷ்ணன், தெய்வசிகாமணி, டேக்வாண்டோ பயிற்சியாளர் இளவரசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை விருத்தாசலம் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த குழுவினர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்