கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை

கோவையில் டாஸ்மாக் மேற்பார்வையாளர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

Update: 2023-08-03 06:01 GMT

கோவை,

கரூரில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் உதவியாளர் வீடு உள்பட 4 இடங்களில் இன்று காலை முதல் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில், கோவையிலும் இந்த சோதனையானது நடைபெற்று வருகிறது.

டாஸ்மாக் மேற்பார்வையாளராக இருப்பவர் முத்துபாலன். இவரது வீடு கோவை ராமநாதபுரம் 80 அடி ரோடு மணியம் சுப்பிரமணியர் வீதியில் உள்ளது. இவரது வீட்டிற்கு இன்று காலை 6 மணிக்கு காரில் 10 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்று சோதனை நடத்தி வருகின்றனர். வீடுகளின் கதவுகள் அடைக்கப்பட்டன.  வீட்டில் உள்ள ஒவ்வொரு அறையாக சென்று அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையின்போது அமலாக்கத்துறையினர் பல்வேறு முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது.

அமலாக்கத்துறை சோதனையையொட்டி வீட்டின் முன்பு அதிவிரைவுபடை போலீசார் 10 பேர் துப்பாக்கி ஏந்திய நிலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். வீட்டின் முன்பு யாரும் கூடிவிடாத வகையிலும், உள்ளே யாரும் நுழையாத வண்ணமும் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகின்றனர். கோவையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்