நடப்பு கல்வியாண்டுக்கான என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடக்கம்
என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.;
கோப்புப்படம்
சென்னை,
தமிழ்நாடு முழுவதும் 476 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், பி.இ., பி.டெக்., ஆகிய படிப்புகளில் 2 லட்சத்து 32 ஆயிரம் இடங்கள் உள்ளன. 2024-25-ம் கல்வியாண்டு என்ஜினீயரிங் படிப்புகளில் சேருவதற்கு விண்ணப்பித்தவர்களில், தகுதியான 1 லட்சத்து 99 ஆயிரத்து 868 மாணவர்களுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 10-ந்தேதி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், என்ஜினீயரிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. முதல்கட்டமாக, அரசு பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை பயின்ற மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்குகிறது. முதல் நாளான இன்று, அரசு பள்ளிகளைச் சேர்ந்த சிறப்பு பிரிவு மாணவர்கள் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் விருப்ப கல்லூரி மற்றும் படிப்புகளை தேர்வு செய்ய கால அவகாசம் வழங்கப்படும்.
இன்று இரவு 9 மணிக்கு, கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு தற்காலிக ஒதுக்கீட்டு ஆணையும், நாளை (செவ்வாய்கிழமை) மாலை 5 மணிக்குள் தற்காலிக ஒதுக்கீடு ஆணையையும் உறுதி செய்யவும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, இறுதி ஒதுக்கீடு ஆணை அன்றைய தினம் இரவு 9 மணிக்கு வெளியிடப்படுகிறது. தொடர்ந்து, வருகிற 25-ந்தேதி முதல் 28-ந்தேதி சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.