கோவையில் அ.தி.மு.க சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம்

தி.மு.க அரசை கண்டித்து கோவையில் அ.தி.மு.க சார்பில் இன்று உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது.

Update: 2022-12-01 23:24 GMT

கோவை,

கோவை மாவட்ட ஒருங்கிணைந்த அ.தி.மு.க சார்பில் தி.மு.க அரசை கண்டித்து 2-ந்தேதி இன்று (வெள்ளிக்கிழமை) கோவை சிவானந்தா காலனியில் உண்ணாவிரத போராட்டம் நடக்கிறது. இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளருமான எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ. தலைமை தாங்குகிறார்.

முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ச்சுணன் எம்.எல்.ஏ., புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். காலை 9 மணிக்கு உண்ணாவிரதம் போராட்டம் தொடங்குகிறது.

இதில் முன்னாள் முதல்-அமைச்சரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றுகிறார்.

தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் தி.மு.க அரசு கோவை மாவட்டத்தை தொடர்ந்து புறக்கணிப்பதாகவும், கோவையில் எந்தஒரு திட்டத்தையும் செயல்படுத்தவில்லை என்று கூறியும், தமிழக மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சொத்து வரி, பால் விலை, மின் கட்டண உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் இந்த உண்ணாவிரத போராட்டமானது நடக்கிறது. போராட்டத்தையொட்டி சிவானந்தா காலனி பகுதியில் ஏற்பாடுகளை அ.தி.மு.கவினர் செய்து வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்