கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்க வேண்டும் என கடலூாில் நடந்த அரசு ஊழியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.;

Update:2022-12-04 00:15 IST

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட பிரதிநிதித்துவ பேரவை மாநாடு கடலூரில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் வெங்கடாஜலபதி, ஓய்வூதியர் கூட்டமைப்பு தலைவர் புருஷோத்தமன், மாநில பொருளாளர் பாஸ்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட இணை செயலாளர் பாலகிருஷ்ணன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன், பொருளாளர் வெங்கடேசன் ஆகியோர் வரவு-செலவு அறிக்கையை வாசித்தனர்.

கூட்டத்தில் கடலூர் நகரின் மைய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைத்திட வேண்டும். கடலூரில் இருந்து புதுச்சேரி வழியாக சென்னைக்கு ரெயில் போக்குவரத்தை தொடங்கிட வேண்டும். அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும். ஒன்றிய அரசு வழங்கியது போல் 1.1.2022 முதல் 4 சதவீதம் அகவிலைப்படியை முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும். சிதம்பரம் வட்டத்தில் இருந்து புதிதாக உருவாக்கப்பட்டுள்ள புவனகிரி வட்டத்திற்கு உடனடியாக கிளை கருவூலமும், தீயணைப்பு நிலையமும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட துணை தலைவர்கள் கவியரசு, வீரமணி, இணை செயலாளர்கள் ரத்தினகுமரன், தமிழ்செல்வன், மாநில செயற்குழு உறுப்பினர் லெனின் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணை தலைவர் குமார் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்