உளுந்தூர்பேட்டை அருகே பெண் அடித்துக் கொலை; வாலிபர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே பெண்ணை அடித்துக் கொலை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-10-26 18:45 GMT

உளுந்தூர்பேட்டை,

செங்கல்லால் தாக்குதல்

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பாலி கிராமத்தை சேர்ந்தவர் முனியன் மகன் சத்யராஜ் (வயது 35) சற்று மன நலம் பாதிக்கப்பட்டவரான இவர் சம்பவத்தன்று அதேஊரை சேர்ந்த விமலா (50) என்பவருடைய வீட்டு முன்பு நின்று சத்தம் போட்டுக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த விமலா சத்யராஜிடம் ஏன் எனது வீட்டு முன்பு நின்று சத்தம் போடுகிறாய்? என கேட்டு, அவரை கண்டித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ், விமலாவை ஆபாசமாக திட்டி, கீழே கிடந்த செங்கல்லை எடுத்து, அவரை தாக்கினார்.

காயமடைந்த பெண் சாவு

இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி விமலா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் எடைக்கல் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சுகன்யா மற்றும் போலீசார் வழக்குப்பதிந்து, விமலாவை அடித்துக் கொலை செய்த சத்யராஜை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்