தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை: கள்ளக்காதலனுக்கு வலைவீச்சு

அம்பத்தூரில், தாலி கயிற்றால் கழுத்தை இறுக்கி இளம்பெண் கொலை செய்யப்பட்டார். தலைமறைவான கள்ளக்காதலனை போலீசார் ேதடி வருகின்றனர்.

Update: 2022-11-18 22:16 GMT

அம்பத்தூர்,

சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பம், கங்கை நகரில் உள்ள ஒரு வீட்டின் அருகே நேற்று அதிகாலை இளம்பெண் ஒருவர் பிணமாக கிடப்பதாக அம்பத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இளம்பெண்ணின் கழுத்து இறுக்கப்பட்டு இருப்பது தெரிந்தது. எனவே அவர், கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது.

கள்ளக்காதல்

இது குறித்து அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ், இன்ஸ்பெக்டர் ராமசாமி தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பவித்ரா (28) என்பது ெதரியவந்தது.

செங்குன்றத்தைச் சேர்ந்தவரான பவித்ரா, அதே பகுதியைச் சேர்ந்த ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் கருத்துவேறுபாடு காரணமாக அவரை பிரிந்து விட்டார்.

இதற்கிடையில் அம்பத்தூர் கள்ளிகுப்பம், கங்கை நகர் பகுதியை சேர்ந்த ராஜா (33) என்பவருடன் பவித்ராவுக்கு பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலனுக்குவலைவீச்சு

கடந்த 6 மாதங்களுக்கு மேலாக ராஜாவுடன், பவித்ரா திருமணம் செய்து கொள்ளாமலேயே கணவன்-மனைவி போல் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்தார்.

வீடுகளுக்கு கொசு மருந்து தெளிக்கும் வேலை செய்து வந்த ராஜாவுக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி, மனைவியை விவாகரத்து செய்து விட்டார். தற்போது பவித்ராவுடன் தனது வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வந்தார்.

பவித்ரா கழுத்தில் கிடந்த தாலி கயிறு மற்றும் கைகளால் அவரது கழுத்தை இறுக்கி கொலை செய்யப்பட்டதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. மேலும் இதுபற்றி அம்பத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான கள்ளக்காதலன் ராஜாவை தேடி வருகின்றனர். அவர் பிடிபட்டால்தான் பவித்ரா கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்