பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும்
பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.;
பொருளாதாரத்தில் இந்தியா விரைவில் முதலிடத்தை பிடிக்கும் என்று திருப்பூரில் நடந்த நிகழ்ச்சியில் ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் கூறினார்.
ஜார்கண்ட் கவர்னர்
மத்திய அரசின் தகவல் ஒலிபரப்பு அமைச்சகம், மக்கள் தொடர்பகம் சார்பில் மக்கள் நலத்திட்டங்கள், சர்வதேச சிறுதானிய ஆண்டு, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற வாழ்க்கை முறை ஆகியவை குறித்து பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியில் விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இதனை, ஜார்கண்ட் மாநில கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் ரிப்பன் வெட்டி தொடங்கிவைத்தார்.
இந்திய அஞ்சல் துறை, பிரதமரின் மக்கள் மருந்தகம், கனரா வங்கி ஊரக சுயவேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம், மாவட்ட சமூக நலஅலுவலகம், ஆகியன சார்பில் அமைக்கப்பட்டிருந்த அரங்குகளையும் அவர் பார்வையிட்டார்.
மக்கள் சேவையில் மகத்தான 9 ஆண்டுகள், திட்டங்களும் சாதனைகளும் என்ற இரு குறிப்பேடுகளையும் வெளியிட்டார். சந்திரயான் வெற்றி குறித்த வீடியோவை மாணவிகள் பார்வைக்கு ஒளிப்பரப்பு செய்தனர். பின்னர் மத்திய மக்கள் தொடர்பகம், பத்திரிகை தகவல் அலுவலகத்தின் கூடுதல் தலைமை இயக்குனர் அண்ணாதுரை பேசினார். அதை தொடர்ந்து, ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசியதாவது:-
முதலிடத்தில் இந்தியா
பிரதமரின் கடந்த 9 ஆண்டுகால ஆட்சியில் பல்வேறு சாதனைகளை இந்தியா நிகழ்த்தியுள்ளது. அதில் மிக முக்கியமாக இந்தியாவை மற்ற நாடுகள் திரும்பி பார்க்க வைக்கும் அளவில் சந்திரயான் மூலம் நிலவின் தென் துருவத்தில் கால் பதித்துள்ளோம். அனைத்து பிரதமர்களை விடவும் பிரதமர் மோடி மிகச் சிறந்த ஆளுமை உள்ளவராக இருக்கிறார்.
பொருளாதாரத்தில் அமெரிக்கா, சீனா உள்ளிட்ட நாடுகளை பின்னுக்கு தள்ளி நாம் முதலிடத்தில் வரக்கூடிய நாள் வெகு தூரத்தில் இல்லை.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் இணை இயக்குனர் அருண்குமார், கள விளம்பர அலுவலர் பிபின் நாத், எம்.எஸ்.எம்.ஆனந்தன் எம்.எல்.ஏ., வீரபாண்டி மேற்கு கழகம் செயலாளர் சுரேந்திரன், முன்னாள் கவுன்சிலர் ஆண்டிபாளையம் ஆனந்தன், குமரன் மகளிர் கல்லூரி முதல்வர் வசந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.