ஓட்டல் உரிமையாளரை தாக்கிய 3 பேர் கைது

தஞ்சையில் ஓட்டலில் தகராறில் ஈடுப்பட்டதோடு, உரிமையாளரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2022-11-12 20:05 GMT

தஞ்சாவூர்;

தஞ்சையில் ஓட்டலில் தகராறில் ஈடுப்பட்டதோடு, உரிமையாளரை தாக்கிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஓட்டலில் தகராறு

தஞ்சை கரந்தை பகுதியை சேர்ந்தவர் சிராஜூதீன் (வயது 47). இவர் கரந்தையில் தீன் சிக்கன் கார்னர் என்ற பெயரில் ஓட்டல் நடத்தி வருகிறார். இவருடைய ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் வந்து சிக்கன் ரைஸ் கேட்டுள்ளார். அதற்கு அங்கிருந்த மாஸ்டர், முதலில் வந்தவருக்கு கொடுத்து விட்டு தருகிறேன் என கூறி உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் மாஸ்டருடன் தகராறில் ஈடுபட்டுள்ளார்.உடனே சிராஜூதீன் அவரை சமாதானம் செய்து அனுப்பியதாக கூறப்படுகிறது. அங்கிருந்து சென்ற வாலிபர் சிறிது நேரத்தில் தனது நண்பர்களுடன் வந்து ஓட்டலை சூறையாடியதுடன், அங்கிருந்த உணவு பொருட்களை சாலையில் கொட்டியும், பொருட்களை உடைத்தும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர்.

3 பேர் கைது

தொடர்ந்து அந்த நபர்கள் சிராஜூதீனுக்கு சொந்தமான மற்றொரு ஓட்டலுக்கும் சென்று அங்கேயும் ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இதனை தட்டிக்கேட்ட போது தாக்கப்பட்டதில் காயமடைந்த உரிமையாளர் சிராஜூதீன் தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து சிராஜூதீன் மகன் முகமது இப்ராஹிம் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.அதன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கரந்தை குளத்து மேட்டுதெருவை சேர்ந்த சரண்ராஜ் (வயது 24) மற்றும் அவருடைய நண்பர்களான கீரைக்கார தெருவை சேர்ந்த விக்கி (25), பள்ளியக்ரஹாரத்தை சேர்ந்த கிறிஸ்துராஜ் (21) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்