கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

Update: 2022-07-10 17:06 GMT

நீர்வரத்து அதிகரிப்பு

தென்பெண்ணை ஆற்று படுகை மற்றும் கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் மழையால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணைக்கு தண்ணீர் வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி, கடந்த 6-ந் தேதி அணைக்கு வினாடிக்கு 392 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்தது.

இந்த நிலையில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,242 கனஅடியாக அதிகரித்தது. இதனால் அணையின் மொத்த உயரமான 52 அடியில் தற்போது 50.25 அடி தண்ணீர் உள்ளது. தொடர்ந்து கர்நாடகா மற்றும் தென்பெண்ணை ஆற்று படுகை பகுதியில் மழை பெய்து வருவதால், அணைக்கு வரும் தண்ணீரை வினாடிக்கு 1,242 கனஅடி தண்ணீரும் பாசனத்திற்காகவும், ஆற்றிலும் பொதுப்பணித்துறையினர் திறந்து விட்டுள்ளனர்.

விவசாயிகள் மகிழ்ச்சி

தொடர்ந்து அணைக்கு வரும் தண்ணீரின் அளவு அதிகரித்துள்ளதால், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. இருப்பினும் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூல் பெற்று பயனடையுமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகள் கேட்டு கொண்டுள்ளனர். கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்