ஜாக்டோ-ஜியோ மனித சங்கிலி போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.;
பொள்ளாச்சி,
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த கோரி ஜாக்டோ-ஜியோ சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
மனித சங்கிலி போராட்டம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகள் மற்றும் முதுநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். தொகுப்பூதியம், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சாலை பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ சார்பில் பொள்ளாச்சியில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
இதற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி கூட்டணி கோவை மாவட்ட செயலாளர் தங்கபாசு தலைமை தாங்கினார். மனித சங்கிலியில் கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் கழுத்தில் தொங்க விட்டு இருந்தனர். இதில் உயர்நிலை ஆசிரியர் கழக நிர்வாகி சாதிக், முதுநிலை ஆசிரியர் கழக நிர்வாகி காஜா மொய்தீன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
பணி நிரந்தரம்
இதேபோல் ஆனைமலை முக்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் நிவாஸ் தலைமை தாங்கினார். ஆனைமலை வட்டார செயலாளர் குமார், தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சங்க மாநில பொறுப்பாளர் பாலசுப்ரமணியம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியில் பணிபுரியும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் குளோரி குணசீலி அவர்கள் நன்றி கூறினார்.
இதேபோல் வால்பாறை காந்தி சிலை பஸ் நிறுத்தம் பகுதியில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. இதற்கு ஒருங்கிணைப்பாளர் ரஞ்சித் குமார் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். முடிவில் தலைவர் இளங்கோ நன்றி கூறினார்.