பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீச்சு

திருமானூர் அருகே பெண்ணை கொன்று சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசிய தோழிகள் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-11 18:53 GMT

பெண் கொலை

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்குட்பட்ட அருங்கால் கிராமத்தில் ரெங்கராஜன் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் கடும் துர்நாற்றம் வீசியது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கிணற்றில் எட்டி பார்த்தனர். அப்போது ஒரு சாக்கு மூட்டை மிதப்பதை கண்டனர். பின்னர் அவர்கள் கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு அந்த மூட்டையை போலீசார் மேலே கொண்டு வந்தனர். பின்னர் அந்த சாக்கு மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் ஒரு பெண்ணின் உடல் அழுகிய நிலையில் இருந்தது. மேலும் அவர் கொலை செய்யப்பட்டு 10 நாட்களுக்கு மேல் இருக்கும் என்பது தெரிய வந்தது.

கோவில் திருவிழா

இதனைத்தொடர்ந்து அந்த உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், இறந்தவர் தஞ்சை வடக்கு வாசலை சேர்ந்த வசந்தி (வயது 45) என்பது தெரியவந்தது.

மேலும், இவருக்கும், அரியலூர் மாவட்டம் அருங்கால் கிராமத்தை சேர்ந்த செல்வி (42), மாரியாயி (45) ஆகியோருடன் பழக்கம் இருந்துள்ளது. தற்போது அருங்கால் கிராமத்தில் நடந்த திருவிழாவில் கலந்து கொள்வதற்காக 10 நாட்களுக்கு முன்பே செல்வி வீட்டில் வசந்தி தங்கி இருந்தது தெரியவந்தது.

2 தோழிகள் கைது

இந்தநிலையில் அவர்களுக்குள் இருந்த பணம் கொடுக்கல்-வாங்கல் தகராறில் செல்வி மற்றும் மாரியாயி ஆகியோர் தங்கள் தோழிகள் சிலர் உதவியுடன் பாலில் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளை கலந்து கொடுத்து வசந்தியை கொன்று சாக்கு மூட்டையில் அவரது உடலை கட்டி கிணற்றில் வீசியது தெரிய வந்தது.

இதையடுத்து மாரியாயி மற்றும் கரூரில் தலைமறைவாக இருந்த செல்வியை கீழப்பழுவூர் போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்