தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-09-29 20:50 GMT

முதியவர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து தஞ்சை கோர்ட்டு உத்தரவிட்டது.

முதியவர் கொலை

தஞ்சை மேலஅலங்கம் முருகன் ஆஸ்ரமம் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவருடைய மனைவி சின்னபேச்சி (வயது63). இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளார். மேலஅலங்கம் காளிகோவில் பின்புறம் வசித்து வரும் மகாலிங்கம் மகன் மகேந்திரன் (38). தொழிலாளியான, இவர் பெட்டிக்கடைக்கு வந்து சின்னபேச்சியிடம் தகராறு செய்ததுடன் கடை மீது கல்லை வீசி சென்றுள்ளார். சம்பவத்தன்று பெட்டிக்கடை மீது கல்லை வீசியபோது, எதற்காக கடை மீது கல்லை வீசினாய் என மகேந்திரனிடம் சின்னபேச்சி கேட்டார்.

அப்போது அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த மகேந்திரன் தான் வைத்திருந்த கத்தியால் சின்னபேச்சியை குத்துவதற்கு முயற்சி செய்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த சின்னபேச்சி அங்கிருந்து ஓடி வந்து அருகில் இருந்த துரை (67) என்பவரது வீட்டிற்குள் சென்றார். ஆனால் அவரை பின்தொடர்ந்து மகேந்திரனும் அந்த வீட்டிற்குள் சென்று கத்தியால் சின்னபேச்சியை குத்தினார். இதை பார்த்து தடுக்க வந்த துரையையும் கத்தியால் மகேந்திரன் குத்தினார். இதில் துரை சம்பவ இடத்திலேயே ரத்தவெள்ளத்தில் பலியானார்.

ஆயுள் தண்டனை

சின்னபேச்சி படுகாயத்துடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று அவர் குணம் அடைந்தார். இது குறித்து தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அப்போதைய போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து மகேந்திரனை கைது செய்தார்.இந்த வழக்கு தஞ்சை 2-வது கூடுதல் மாவட்ட அமர்வு கோர்ட்டில் நடந்தது வந்தது.

இந்த வழக்கை தற்போதைய இன்ஸ்பெக்டர் சந்திரா தொடர்ந்து நடத்தி வந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மலர்விழி நேற்று தீர்ப்பு அளித்தார். அந்த தீர்ப்பில், மகேந்திரனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.25 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் தியாகராஜன் ஆஜராகி வாதாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்