மாமன்னன் ராஜராஜ சோழன் போல பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும் - வானதி சீனிவாசன்

அயோத்தியில் நாளை ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

Update: 2024-01-21 14:31 GMT

Image Courtesy: @narendramodi

சென்னை,

தமிழக பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

அயோத்தியில் நாளை ராமர் கோயில் பிராண பிரதிஷ்டை நடைபெறவுள்ளது. அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் மீண்டும் ராமருக்கு கோயில் கட்ட வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் 500 ஆண்டுகால கனவு. இந்த கனவு இப்போது நனவாகியுள்ளது.

ராமர் கோயில் பிராண பிரதிஷ்டையில் பங்கேற்கும் பிரதமர் மோடி 11 நாட்கள் தரையில் உறங்கி, கடுமையான விரதம் இருந்து வருகிறார். அதுமட்டுமல்லாது ராமரோடு தொடர்புடைய கோயில்களுக்குச் சென்று வழிபட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, ராமேஸ்வரம் ராமநாதசுவாமி, தனுஷ்கோடி கோதண்டராமர் கோயில்களில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தி திரும்பியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்றி ராமர் கோயில் சாத்தியமாகி இருக்காது. நம் தமிழகத்தின் தஞ்சாவூரில் மிகப் பிரம்மாண்டமான சிவாலயம் எழுப்பிய மாமன்னன் ராஜராஜ சோழன் போல ஆயிரமாண்டுகள் தாண்டியும் பிரதமர் நரேந்திர மோடியின் புகழ் என்றென்றும் நிலைத்து நிற்கும்.

ராமர் கோயிலுக்காக 500 ஆண்டுகளாக போராடிய அனைவருக்கும் இந்த நேரத்தில் என் பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Tags:    

மேலும் செய்திகள்