திண்டிவனம் அருகேஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம்

திண்டிவனம் அருகே ஊரக வளர்ச்சித்துறை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.

Update: 2023-01-08 18:45 GMT

மயிலம், 

திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் உள்ள மயிலம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் மயிலம் ஒன்றியத்தில் பணிபுரியும் ஊரக வளர்ச்சி துறை பணியாளர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இதற்கு மயிலம் (ஊரக வளர்ச்சி) வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி தலைமை தாங்கினார். திண்டிவனம் உதவி செயற்பொறியாளர் பாஸ்கர் முன்னிலை வகித்தார். மயிலம் வட்டார சுகாதார ஆய்வாளர் துரைசாமி வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன் கலந்து கொண்டு முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசினார். முகாமில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தேன்மொழி தலைமையிலான டாக்டர் ரவிவர்ம ராஜா, டாக்டர் தனலட்சுமி மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழுவினர் கலந்து கொண்டு 350 பேருக்கு உடல் பரிசோதனை செய்து, நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தனர். முகாமில் இ.சி.ஜி., கர்ப்பப்பை வாய் புற்று நோய் கண்டறிதல், மார்பக புற்றுநோய், ஆஸ்துமா, சர்க்கரை ரத்த பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டது. இதில் மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், வட்டார வளர்ச்சி அலுவலக உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், துப்புரவு பணியாளர்கள் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர.

Tags:    

மேலும் செய்திகள்