ஆன்லைன் விளம்பரம் மூலம் பணமோசடி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேர் கைது

ஆன்லைன் விளம்பரம் மூலம் பணத்தை இழந்த கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-05-13 06:57 GMT

ஆன்லைன் விளம்பரம் மூலம் பணமோசடி: கல்லூரி மாணவி தற்கொலை வழக்கில் மேற்கு வங்க வாலிபர்கள் 3 பேர் கைதுசென்னை ஏழுகிணறு போர்ச்சுகிசீயர் தெருவை சேர்ந்தவர் சாந்தி. இவருக்கு 2 மகள்கள். மூத்த மகள் மகாலட்சுமி (வயது 19). இவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் மகாலட்சுமி, இன்ஸ்டாகிராமில் வந்த ஆன்லைன் விளம்பரத்தை பார்த்து ஆன்லைன் மூலம் பங்கு வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளார். இதில் அதிக பணம் கிடைக்கும் என நம்பி ரூ.35 ஆயிரம் வரை பணம் கட்டி இழந்துவிட்டார். இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கல்லூரி மாணவி மகாலட்சுமி கடந்த மாதம் 2-ந் தேதி வீட்டில் மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சபியுல்லா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி உத்தரவின் பேரில், பூக்கடை மாவட்ட போலீஸ் துணை கமிஷனர் ஆல்பர்ட் ஜான் மற்றும் உதவி கமிஷனர் வீரக்குமார் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபியுல்லா தலைமையில் தனிப்படை போலீசார், கடந்த 28-ந் தேதி கொல்கத்தா விரைந்தனர். தனிப்படை போலீசார் கொல்கத்தாவில் சுமார் 10 நாட்களுக்கு மேல் தங்கி விசாரணை நடத்தினர்.

அதில் ஆன்லைனில் பணம் மோசடி செய்த மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவைச் சேர்ந்த அமுலுல்லா கான் (20), முகமது பைசல் (21), முகமது ஆசிப் இக்பால் (22) ஆகிய 3 பேரையும் கைது செய்து சென்னைக்கு அழைத்து வரப்பட்டனர்.

ஆன்லைன் பணம் மோசடி செய்த கும்பலை விரைந்து பிடித்த தனிப்படை போலீசை வடசென்னை போலீஸ் இணை கமிஷனர் ரம்யா பாரதி வெகுவாக பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்