ஓசூர் அருகே விவசாயி அடித்துக்கொலை பூட்டிய வீட்டில் பிணமாக கிடந்தார்

ஓசூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

Update: 2023-10-16 19:00 GMT

ஓசூர்:

ஓசூர் அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார்.

விவசாயி

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பேரிகை அருகே கோட்ட சாதனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் கிருஷ்ணப்பா. இவரது மகன் பாலாஜி (வயது35). விவசாயி. இவருக்கு ராதா என்ற மனைவியும், விஷ்ணு(13), ஜோதிமூர்த்தி (10) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

இதனால் ராதா கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை பிரிந்து சூளகிரி அருகே சின்னமட்டூர் கிராமத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு, மகன்களுடன் சென்று விட்டார். மனைவி பிரிந்து சென்றதால் பாலாஜி தனியாக வசித்து வந்தார். இதனிடையே நேற்று பாலாஜி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியது.

அடித்துக்கொலை

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்கள் பேரிகை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அப்போது கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டு இருந்தது. பின்னர் போலீசார் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது, அங்கு உடல் அழுகிய நிலையில் பாலாஜி பிணமாக கிடந்தார். கடந்த 4 நாட்களுக்கு முன்பு அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரியவந்தது. இதையடுத்து போலீசார், பாலாஜியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணை

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டு வீட்டில் அழுகிய நிலையில் பிணமாக கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்