தஞ்சை வேதபுரீஸ்வரர் கோவிலின் நடராஜர் சிலை அமெரிக்காவில் கண்டுபிடிப்பு...!

தஞ்சை வேதபுரீஸ்வரர் கோவிலில் 62 ஆண்டுகளுக்கு முன்பு திருடப்பட்ட நடராஜர் சிலை அமெரிக்காவில் இருப்பதை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் உறுதி செய்தனர்.

Update: 2022-09-05 10:04 GMT

தஞ்சை,

தஞ்சை மாவட்டம் திருவேதிக்குடி கண்டியூரில் பிரசித்தி பெற்ற வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 62 ஆண்டுகளுக்கு முன்பு மர்ம நபர்கள் புகுந்து பழங்கால நடராஜர் சிலையை கொள்ளையடித்து சென்றனர்.

இதுகுறித்து நடுக்காவேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. ஆனால் வழக்கில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதையடுத்து திருவேதிக்குடி கிராமத்தை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில்சிலை கடத்தல் தடுப்புபிரிவு இன்ஸ்பெக்டர் இந்திரா தலைமையில் சப்- இன்ஸ்பெக்டர் சின்னத்துரை, காவலர் ஜெகதீசன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பாலமுருகனின் நேரடி மேற்பார்வையில் விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் தற்போது கோவிலில் பக்தர்கள் வழிபட்டு வரும் நடராஜர் சிலை போலியானது என்பதும், 62 ஆண்டுகளுக்கு முன்பு உண்மையான நடராஜர் சிலை திருடப்பட்டு வெளிநாட்டுக்கு கடத்தப்பட்டதும் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து புதுச்சேரியின் இந்தோ- பிரெஞ்சு நிறுவனத்திடம் இருந்து நடராஜர் சிலையின் அசல் புகைப்படங்களை விசாரணை குழுவினர் கேட்டனர்.

பின்னர் அசல் சிலையின் படத்தை பெற்றுக்கொண்டு பல்வேறு அருங்காட்சியகங்கள், கலை பொருள் சேகரிப்பாளர்களின் சிற்றேடுகள், ஏல மையங்களின் வலைதளங்களில் உலகளாவிய தேடலை தொடங்கியது. விரிவான தேடலுக்கு பிறகு அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் கொள்ளைபோன நடராஜர் உண்மையான சிலை இருப்பதை விசாரணை குழுவினர் கண்டுபிடித்தனர்.

மேலும் அருங்காட்சியக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட சிலையின் படத்தை புதுச்சேரியில் உள்ள இந்தோ-பிரெஞ்சு நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட படத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது நியூயார்க்கில் உள்ளது வேதபுரீஸ்வரர் கோவிலின் நடராஜர் சிலை தான் என்பது நிரூபணம் ஆனது.

இதனை தொடர்ந்து அமெரிக்காவின் நியூயார்க்கில் இருந்து நடராஜர் சிலையை மீட்க சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் கோவிலில் வேறு ஏதேனும் சிலைகள் திருடப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்