தேனி அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து

தேனி அருகே வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது

Update: 2022-09-27 15:58 GMT

தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் கம்பம் சாலையில் பெட்ரோல் விற்பனை நிலையம் எதிரே தனியார் வணிக வளாகம் உள்ளது. இதில் துணிக்கடைகள், பெயிண்ட் கடை, தனியார் சுற்றுலா அலுவலகம், என்ஜினீயர் அலுவலகம் உள்ளிட்டவை உள்ளன. இதில் முதல் தளத்தில் சின்னமனூரை சேர்ந்த என்ஜினீயர் சிவக்குமார் என்பவரின் அலுவலகம் உள்ளது.

அந்த அலுவலகத்தில் இன்று இரவு 7 மணி அளவில் திடீரென தீ பற்றி எரிந்தது. இந்த தீ அலுவலகம் முழுவதும் வேகமாக பரவியது. வணிக வளாகத்தில் உள்ள கடைகளின் பெயர் பலகைகளிலும் தீ பற்றியது. இதனால் அங்குள்ள கடைகளில் பணியாற்றும் ஊழியர்கள் அலறி அடித்து வெளியே ஓடினர். தகவல் அறிந்ததும் தேனி தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த விபத்தில் அந்த அலுவலகத்தில் இருந்த ஏ.சி., டி.வி. உள்ளிட்ட பொருட்கள் தீயில் கருகின. மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்