கம்பத்தில்கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு

கம்பத்தில் கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா என்று விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Update: 2023-08-21 18:45 GMT

கம்பம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இரட்டை மாட்டுவண்டி எல்லை பந்தயம் மற்றும் ஆட்டுக்கிடா, சேவல் சண்டைகள் ரகசியமாக நடத்தப்படுகின்றன. இதில் பங்கேற்பதற்காக, கம்பம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளை, ரேக்ளா பந்தய மாடுகள், நாட்டு மாடுகள், உயர்ரக நாய்கள், சண்டை கிடா, சேவல் போன்றவற்றை இளைஞா்கள் அதிகம் வளர்த்து வருகின்றனர். இதனால், தங்களது வளர்ப்பு பிராணிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக தினமும் பொதுப்பணித்துறை வளாக பகுதியில் உள்ள கால்நடை மருந்தகத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கால்நடை மருந்தகத்தை மருத்துவமனையாக தரம் உயர்த்த கால்நடை மற்றும் பராமரிப்புத் துறையினர் முடிவு செய்தனர். இதற்கான திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு இயக்குனரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதன்பிறகு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கால்நடை மருந்தகம், மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டால், கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர், 2 கால்நடை டாக்டர்கள் கால்நடை ஆய்வாளர்கள், உதவியாளர்கள் நியமிக்கப்பட்டு, அறுவை சிகிச்சை அரங்கு, ஸ்கேனிங் பரிசோதனை உள்ளிட்ட உயர்தர மருத்துவ கருவிகள் அமைக்கப்படும். இதன்மூலம் கால்நடைகளுக்கு தடையின்றி சிகிச்சை கிடைக்கும். எனவே கால்நடை மருந்தகம் தரம் உயர்த்தப்படுமா? என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் உள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்