படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் கருத்துருக்களை சமர்ப்பிக்கலாம்

படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்க நிறுவனங்கள் கருத்துருக்களை சமர்ப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-01 19:30 GMT

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் வேலை வாய்ப்புடன் கூடிய திறன் வளர்ப்பு மற்றும் பணியமர்த்தும் திட்டத்தின் கீழ் நகர்ப்புற படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு பல்வேறு திறன் வளர்ப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் 2022-23-ம் நிதி ஆண்டிற்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் நடத்துவதற்கு பெரம்பலூர் நகரத்தினை தலைமையிடமாகக் கொண்ட பயிற்சி நிறுவனங்களிடம் இருந்து கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. திறன் வளர்ப்பு பயிற்சி நிறுவனங்கள் தேசிய திறன் வளர்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். பிரதமர் கவுசல் கேந்திர பயிற்சி மையங்களை கொண்ட திறன் வளர்ப்பு பயிற்சி மையங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். அரசு துறை மூலம் திறன் வளர்ப்பு மற்றும் ஊதிய வேலை வாய்ப்பு திட்டங்களில் ஏற்கனவே பங்கு பெற்று சிறப்பாக பணிபுரிந்த நிறுவனங்கள் உரிய ஆதாரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

பெரம்பலூர் மாவட்டத்திற்கு ஏற்ற வகையில் பயிற்சி திட்டங்கள் மற்றும் அதனை தொடர்ந்து அளிக்கப்படும் வேலை வாய்ப்பு விவரங்கள் அடங்கிய செயல்திட்டத்தினை தயாரித்து வழங்க வேண்டும். திறமையை அடிப்படையாக கொண்டு வளர்ச்சியினை உறுதி செய்திடும் வகையிலான பயிற்சி திட்டங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். மேற்காணும் தகுதிகளை கொண்ட பயிற்சி நிறுவனங்கள் தங்களது கருத்துருக்களை பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் அலுவலகத்தில் வருகிற 10-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்