வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் தேரோட்டம் - திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

சென்னை வியாசர்பாடியில் ரவீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-23 10:41 GMT

சென்னை வியாசர்பாடி மூர்த்திங்கர் தெருவில் உள்ள மரகதாம்பாள் உடனுறை ரவீஸ்வரர் கோவிலில் பிரம்மோற்சவ திருவிழா கடந்த 14-ந்தேதி தொடங்கியது. விழாவையொட்டி தினமும் சாமிக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, சாமி திருவீதியுலா நடைபெற்றது.

பிரம்மோற்சவ விழாவின் முக்கிய விழாவான தேரோட்டம் நேற்று காலை நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்ட உற்சவர் ரவீஸ்வரர் மற்றும் மரகதாம்பாள் சிலைகள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

கோவிலில் இருந்து புறப்பட்ட தேர், எருக்கஞ்சேரி ஹைரோடு, வியாசர்பாடி 2-வது பள்ளத்தெரு வழியாக மேக்சின் புரம், வியாசர்பாடி மார்க்கெட், பாலகிருஷ்ணன் தெரு வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது.

இதில் பெரம்பூர் எம்.எல்.ஏ. ஆர்.டி.சேகர், இந்து சமய அறநிலையத்துறை இணை கமிஷனர் தனபால், உதவி கமிஷனர் பாஸ்கரன், கோவில் செயல் அலுவலர் ஆச்சி சிவப்பிரகாசம், மேலாளர் தனசேகர் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தேர் செல்லும் வழி எங்கும் பொதுமக்கள் ஆரத்தி எடுத்து தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்