"சீமானுக்கு தமிழ்நாட்டில் பவர் உள்ளது.. அவரை எதிர்க்க முடியாது.." நடிகை விஜயலட்சுமி விரக்தி

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகாரை வாபஸ் பெற்றார்.

Update: 2023-09-16 03:51 GMT

சென்னை,

நடிகை விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றி விட்டதாக 2011-ம் ஆண்டு வளசரவாக்கம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனிடையே, கடந்த மாதம் மீண்டும் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகை விஜயலட்சுமி இதுகுறித்து மீண்டும் பரபரப்பு புகார் அளித்தார். நடிகை விஜயலட்சுமி புகார் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு 2-வது முறையாக சம்மன் வழங்கப்பட்டது.

இந்த நிலையில், நள்ளிரவில் சென்னை, வளசரவாக்கம் காவல் நிலையத்தில் எழுத்துப்பூர்வமாக புகாரை வாபஸ் பெற்றார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது;

"என்னுடைய புகார் மீதான நடவடிக்கையில் எந்த முன்னேற்றமும் இல்லை. காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை. தனி ஒருவராக போராட என்னால் முடியவில்லை. சீமானை எதிர்கொள்ள எனக்கு போதிய ஆதரவு யாரிடமும் கிடைக்கவில்லை. யாருடைய வற்புறுத்தலினாலும் வாபஸ் பெறவில்லை. சீமானிடம் பேசினேன். வழக்கை வாபஸ் பெற்று விட்டேன்.

வழக்கை தொடர்வது, சென்னைக்கு வருவது இனி இல்லை. இந்த வழக்கில் எதிர்பார்த்த அளவுக்கு திருப்தி இல்லை. வழக்கை வாபஸ் பெற யாரும் என்னை கட்டாயப்படுத்தவில்லை.

சீமான் சூப்பர். அவருக்கு தமிழ்நாட்டில் முழு பவர் உள்ளது. அவர் முன்பு யாரும் ஒன்றும் செய்ய முடியாது. சீமானின் குரல் தான் தமிழ்நாட்டில் ஓங்கி ஒலிக்கிறது. அது ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவர் எப்போதும் நன்றாக இருக்கட்டும். நான் எனது தோல்வியை ஒத்துக்கொண்டே செல்கிறேன்." இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வழக்கு தொடர்பாக சீமான் விசாரணைக்கு ஆஜராக இருந்த நிலையில் நடிகை விஜயலட்சுமி சீமான் மீதான வழக்கை வாபஸ் பெற்றது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

Full View
Tags:    

மேலும் செய்திகள்