போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2023-02-12 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம்,

தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த மாணவரின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

தண்ணீரில் மூழ்கி சாவு

ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செட்டிமடையை சேர்ந்த நடராஜன் மகன் யோகசுதன்(வயது17). இவர் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். சம்பவத்தன்று இப்பள்ளியை சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வால்பாறை பகுதிக்கு கல்வி சுற்றுலா சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள் காலை 8 மணி அளவில் ஆனைமலை தாலுகா ஆழியார் தடுப்பணை சென்ற மாணவ, மாணவிகள் அங்குள்ள தடுப்பணையில் வழிந்து ஓடும் தண்ணீரில் குளிக்க சென்றுள்ளனர். அப்போது தண்ணீரில் ஆழமான பகுதிக்கு சென்ற யோகசுதன் எதிர்பாராத விதமாக அங்குள்ள புதை மண்ணில் சிக்கி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவன் உடலை பிரேத பரிசோதனை செய்து நேற்று காலை 6 மணி அளவில் ஆர்.எஸ்.மங்கலத்தில் உள்ள மாணவன் இல்லத்துக்கு கொண்டு வந்தனர்.

முற்றுகை

இதனை தொடர்ந்து காலை 8 மணி அளவில் மாணவனின் உறவினர்களும், பொதுமக்களும் யோகசுதன் இறப்புக்கு நீதி கேட்டு ஆர்.எஸ்.மங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் போலீசார் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அதன்பின்னர் மாணவனின் உடல் அடக்கம் செய்யப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்