சிகிச்சை பெற வந்தவர்கள் மீது திடீர் தாக்குதல்

பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வந்தவர்கள் மீது திடீர் தாக்குதல் நடத்திய அண்ணன்-தம்பி உள்பட 4 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்

Update: 2022-12-13 18:45 GMT

பண்ருட்டி

இருதரப்பினரிடையே தகராறு

பண்ருட்டி அருகே உள்ள காமாட்சிபேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர்கள் ராமச்சந்திரன் மகன்கள் செல்லமுத்து, ஆறுமுகம். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த கோவிந்தசாமி என்பவரின் குடும்பத்தினருக்கும் இடையே ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கும் போது தகராறு ஏற்பட்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் காயம் அடைந்த செல்லமுத்து, அவரது தம்பி ஆறுமுகம், உறவினர் இளங்கோவன் ஆகிய 3 பேரும் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்தனர்.

சரமாரி தாக்குதல்

அப்போது அங்கு வந்த கோவிந்தசாமி மகன்கள் வெற்றிவேல், ஞானவேல், இவரது மகன் சூர்யா ஆகிய 3 பேரும் சேர்ந்து செல்லமுத்து மற்றும் அவரது தரப்பினரை அசிங்கமாக திட்டி, இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். இதைப்பார்த்து அங்கே நின்று கொண்டிருந்த நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

இதுபற்றிய தகவல் அறிந்து பண்ருட்டி போலீசார் அங்கு விரைந்து வந்தனர். ஆனால் அதற்குள் கோவிந்தசாமியின் மகன்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இந்த தாக்குதலில் செல்லமுத்து உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை உறவினர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

வலைவீச்சு

இது குறித்த புகாரின் பேரில் ஞானவேல் உள்பட 4 பேர் மீது பண்ருட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ் வழக்குப்பதிவு செய்து அவர்களை வலைவீசி தேடி வருகிறார். சிகிச்சை பெற வந்தவர்கள் மீது சராமரி தாக்குதல் நடத்திய சம்பவம் பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்