முதியவர் தற்கொலை மிரட்டல்

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து முதியவர் தற்கொலை மிரட்டல் விடுத்தார்.

Update: 2023-04-06 18:45 GMT

சாயல்குடி, 

சாயல்குடி அருகே கடுகு சந்தை சத்திரம் கிராமத்தில் இருந்து பெரியகுளம் செல்லும் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று நடந்தது. வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, போலீசார் ஒத்துழைப்புடன் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடைபெற்றது. இதையொட்டி அதே பகுதியை சேர்ந்த முருகராஜ் (வயது 60) என்பவரின் வீடு மற்றும் கொட்டகை ஆக்கிரமிப்பு பகுதிகளை அதிகாரிகள் அகற்ற முயன்றனர். அப்போது இதற்கு எதிர்ப்பு தெரிவித்த முருகராஜ் திடீரென அருகில் இருந்த மரத்தின் மீது ஏறி குதித்து தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

அவரிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அரை மணி நேரத்துக்கு மேலாகியும் அவர் கீழே இறங்க மறுத்துவிட்டார். இதையடுத்து போலீஸ்காரர் ஒருவர் மரத்தின் மீது ஏறி பேச்சுகொடுத்து அவரை கீழே இறக்கினார். மேலும் கீழே இறங்கிய சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார். பின்னர் அவர் ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்