திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலி

திருவொற்றியூரில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி இளம்பெண் பலியானார்.

Update: 2023-01-17 07:24 GMT

சென்னை எர்ணாவூர் காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஷாலினி (வயது 27). பட்டதாரியான இவர், ஆவடி அருகே உள்ள அழகு நிலையத்தில் வேலை செய்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் வேலை முடிந்து ஆவடியில் இருந்து மின்சார ரெயிலில் திருவொற்றியூர் விம்கோ நகர் ரெயில் நிலையத்தில் வந்து இறங்கினார். பின்னர் தனது அண்ணனுடன் செல்போனில் பேசிக்கொண்டே ெரயில் தண்டவாளத்தின் ஓரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த எக்ஸ்பிரஸ் ரெயில் அவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த ஷாலினி, உயிருக்கு போராடினார்.

இதற்கிடையில் திடீரென செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டதால் அவரது அண்ணன் மீ்ண்டும் ஷாலினை தொடர்பு கொண்டார். ஆனால் வெகு நேரமாகியும் அவர் செல்போனை எடுக்காததால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர், ஷாலினியை விம்கோநகர் ரெயில் நிலையம் அருகே தேடி பார்த்தனர்.

அப்போது அங்கு உயிருக்கு போராடிக்கொண்டு இருந்த ஷாலினியை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், ஷாலினி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்