பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும்

திருக்கோவிலூர் ஒன்றியத்துக்கு சொந்தமான பழுதடைந்த திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க வேண்டும் கலெக்டரிடம் நகரமன்ற தலைவர் கோரிக்கை

Update: 2023-07-09 18:45 GMT

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் நகர மன்ற தலைவர் டி.என்.முருகன், ஆணையாளர் கீதா, மற்றும் கவுன்சிலர்கள் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமாரை நேரில் சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் திருக்கோவிலூர் கடை தெருவில் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு சொந்தமான பழுதடைந்த நிலையில் பயன்பாடு இல்லாத காந்தி நினைவு நூற்றாண்டு திருமண மண்டபம் இடிந்து விழும் நிலையில் உள்ளது. நகராட்சி பகுதியில் இந்த திருமண மண்டபம் இருப்பதால் அதை நகராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்க உத்தரவிடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இந்த திருமண மண்டபத்தை ஒப்படைத்தால் அதை இடித்து விட்டு ஆங்காங்கே தெருவோரத்தில் காய்கறி மற்றும் பூக்கடை நடத்தி வருபவர்களுக்கு ஒரு மாற்று ஏற்பாடாக பல்வேறு கடைகள் கட்டி வாடகைக்கு விடலாம். இதன் மூலம் நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண முடியும். ஆக்கிரமிப்புகளையும் அகற்றிய நிலை காணப்படும். எனவே பழுதடைந்த காந்தி திருமண மண்டபத்தை நகராட்சி வசம் ஒப்படைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் இது குறித்து அரசின் கவனத்திற்கு எடுத்துச்சென்று விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்