வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு
கடலூரில் வீட்டின் கதவை உடைத்து நகை-வெள்ளி பொருட்கள் திருட்டு போலீசார் விசாரணை
கடலூர்
கடலூர் கூத்தப்பாக்கம் எஸ்.எஸ்.சுப்புராயன் நகரை சேர்ந்தவர் தங்கமேஸ்வரன் (வயது 62). இவர் சம்பவத்தன்று தனது மனைவி புவனேஸ்வரியுடன் வீட்டை பூட்டி விட்டு வெளியில் சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது, வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. இதை கண்டு அதிர்ச்சி அடைந்த தங்கமேஸ்வரன், வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் 1¾ கிலோ வெள்ளி பொருட்களை காணவில்லை. அதனை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. திருடுபோன நகை மற்றும் வெள்ளி பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.1¾ லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
இதுகுறித்து தங்கமேஸ்வரன் திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.