சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய போலீஸ்காரர்

சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-23 19:05 GMT

மானாமதுரை,

சப்-இன்ஸ்பெக்டரை கல்லால் தாக்கிய போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

தகராறு செய்த போலீஸ்காரர்

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்தவர் பரமசிவம் (வயது 53). இவர், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே பூவந்தி போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார்.

இந்தநிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு பூவந்தி சோதனைச்சாவடியில் பணியில் இருந்தார்.

அப்போது, அங்குள்ள பஸ் நிறுத்தத்தில் கடை வைத்திருக்கும் பாஸ்கரன் என்பவர் சப்-இன்ஸ்பெக்டரிடம், முத்துப்பாண்டி என்பவர் தன்னிடம் தகராறு செய்ததாக புகார் கூறியுள்ளார்.

இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவம் மற்றொரு போலீஸ்காரருடன் அங்கு சென்றார். தகராறு செய்த முத்துப்பாண்டியை அழைத்து விசாரணை நடத்தியதில், அவர் இளையான்குடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருவது தெரியவந்தது. இதையடுத்து அவரை எச்சரித்து அங்கிருந்து அனுப்பி வைத்துள்ளார்.

கல்லால் தாக்குதல்

இந்நிலையில் நேற்று அதிகாலை மீண்டும் சோதனை சாவடிக்கு வந்த போலீஸ்காரர் முத்துப்பாண்டி (33) அங்கு பணியில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்திடம் தகராறு செய்துள்ளார். பின்னர் அவரை கல்லால் தாக்கி உள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் பரமசிவத்துக்கு ரத்தக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவர் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ்காரர் முத்துப்பாண்டி மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்