பூக்கள் விலை இருமடங்கு உயர்வு

ஆயுத பூஜையையொட்டி கடலூரில் பூக்கள் விலை இருமடங்கு உயர்ந்தது.

Update: 2023-10-22 18:45 GMT

கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் பூ மார்க்கெட் அமைந்துள்ளது. இங்கு ஆயுத பூஜை மற்றும் விஜய தசமியையொட்டி நேற்று பூக்கள் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் அனைத்து பூக்களின் விலையும் இருமடங்கு உயர்ந்து காணப்பட்டது. அதாவது நேற்று முன்தினம் ரூ.400-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ குண்டு மல்லி நேற்று 800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. அதேபோல் ரூ.240-க்கு விற்கப்பட்ட மல்லிகை பூ ரூ.460-க்கும், ரூ.160-க்கு விற்பனையான சம்பங்கி ரூ.360-க்கும், ரூ.120-க்கு விற்கப்பட்ட ரோஜா ரூ.280-க்கும் விற்பனையானது. மேலும் ரூ.120-க்கு விற்கப்பட்ட சாமந்தி ரூ.240-க்கும், ரூ.30-க்கு விற்கப்பட்ட கோழிக்கொண்டை ரூ.40-க்கும், ரூ.20-க்கு விற்பனையான கேந்தி ரூ.80-க்கும், ரூ.400-க்கு விற்கப்பட்ட கனகாம்பரம் ரூ.600-க்கும், வாடாமல்லி ரூ.60-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இருப்பினும் இந்த விலை உயர்வையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் போட்டி போட்டுக் கொண்டு பூக்களை வாங்கி சென்றதை காண முடிந்தது.

Tags:    

மேலும் செய்திகள்