போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

பாதுகாப்பு கேட்டு போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் காதல் ஜோடி தஞ்சம்

Update: 2023-07-08 18:26 GMT

கள்ளக்குறிச்சி

கச்சிராயப்பாளையம் அருகே மண்மலை கிராமத்தை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் பிரம்மா(வயது 25). இவர் திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. படித்து வந்தபோது திருச்சி பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.சி.ஏ.படித்து வந்த ஈரோடு மாவட்டம் பழனிபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி என்பவரின் மகள் புவனேஸ்வரி(24) என்பவரை காதலித்து வந்தார். தற்போது இவர்கள் இருவரும் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் காதலர்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் திருமணத்துக்கு புவனேஸ்வரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் பெற்றோரின் எதிா்ப்பை மீறி நேற்று புவனேஸ்வரி-பிரம்மா இருவரும் மண்மலை கிராமத்தில் உள்ள சிவன் கோவிலில் மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டனர். பின்னர் இருவரும் பாதுகாப்பு கேட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மனு கொடுத்தனர். மனுவை விசாரித்த போலீஸ் அதிகாரி அதை விசாரணைக்காக கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து அந்த மனு மீது மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்