தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலை ஸ்ரீநகர் காலனியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன். இவரது மகன் பிரவீன்குமார் (வயது 14). இவர் தஞ்சை மங்களபுரத்தில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு முடிந்து வீட்டுக்கு வந்த மாணவர் பிரவீன்குமார் நண்பர்களுடன் வடக்கு மானோஜிப்பட்டிக்கு சென்று அங்குள்ள கல்லணை கால்வாய் புதுஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது தண்ணீர் அதிகமாக இருந்ததால் ஆற்றில் அடித்து செல்லப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கள்ளப்பெரம்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், இரவு நேரமாகி விட்டதால் மாணவரை தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டது. நேற்று காலை தீயணைப்பு படையினரும், போலீசாரும் இணைந்து மாணவர் பிரவீன்குமாரை தேடினர். அப்போது அவர் ஈச்சங்கோட்டை அருகே ஆற்றில் பிணமாக மீட்கப்பட்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.