சொத்தை பிரித்து கேட்ட வாலிபருக்கு அடி-உதை

உளுந்தூர்பேட்டை அருகே சொத்தை பிரித்து கேட்ட வாலிபருக்கு அடி-உதை விவசாயி உள்பட 9 பேர் மீது வழக்கு

Update: 2022-10-05 18:45 GMT

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள மலையடி குன்னத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி நல்லதம்பி. இவரது மகன் நடேசன்(வயது 30). திருமணமாகி அதே ஊரில் தனியாக வசித்து வந்த இவர் நீண்ட நாட்களாக தனது தந்தையிடம் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று வயலில் தென்னை மரத்தில் தேங்காய் பறித்துக் கொண்டிருந்த நல்ல தம்பியிடம் அங்கு வந்த நடேசன் சொத்தை பிரித்து தருமாறு கேட்டுள்ளார். அப்போது அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதைப்பார்த்து அங்கிருந்தவர்கள் ஓடி வந்து இருவரையும் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நல்ல தம்பியும் அவரது மற்ற இரு மகன்களான மகாவிஷ்ணு(29), பாக்யராஜ்(27) மற்றும் இவரது ஆதரவாளர்கள் உள்பட 10-க்கும் மேற்பட்டோர் நடேசனின் வீட்டிற்கு சென்று அவரையும், அவரது மனைவி வரலட்சுமி உறவினர்கள் வெங்கடேசன், அய்யனார் ஆகியோரை திட்டி, தாக்கி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த நடேசன் அவரது மனைவி வரலட்சுமி மற்றும் உறவினர்களை அக்கம் பக்கத்தினர் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இது குறித்து நடேசன் கொடுத்த புகாரின் பேரில் நல்லதம்பி உள்பட 9 பேர் மீது திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்