ராசிபுரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டுமர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு

Update: 2023-04-10 18:39 GMT

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே விவசாயி வீட்டில் 15 பவுன் நகை திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கதவு திறந்து கிடந்தது

ராசிபுரம் அருகே உள்ள குறுக்கபுரம் ஊராட்சி காமராஜ் நகர் கள்ளு கடன்காடு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி. இவருடைய வீட்டின் மேல்மாடியில் ரெட்டிபுதூர் பகுதியை சேர்ந்த விவசாயி முருகேசன் (வயது 41) என்பவர் தனது மனைவி ஜெயலட்சுமி மற்றும் மகன் ஆகியோருடன் வாடகைக்கு குடியிருந்து வந்தார். வீட்டின் உரிமையாளர் துரைசாமி அவரது குடும்பத்தாருடன் அபுதாபிக்கு சென்று விட்டார்.

இந்த நிலையில் முருகேசன் தனது மனைவி மற்றும் மகனுடன் கடந்த சில தினங்களுக்கு முன் சொந்த ஊருக்கு சென்று விட்டார். நேற்று அவரது வீட்டின் கதவு திறந்து கிடப்பதாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் தகவல் தந்துள்ளனர். அதன் பேரில் உடனடியாக வீட்டுக்கு வந்த முருகேசன் மற்றும் மனைவி உள்ளே சென்று பார்த்தனர்.

வலைவீச்சு

அப்போது பீரோவை திறந்து அதில் வைக்கப்பட்டு இருந்த வளையல்கள், செயின் உள்பட 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம் இருக்கலாம் என கூறப்படுகிறது. இதுகுறித்து ராசிபுரம் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுகவனம், சப்-இன்ஸ்பெக்டர் தங்கம் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

நாமக்கல்லில் இருந்து கைரேகை நிபுணர் முகேஷ் வந்திருந்து தடயங்களை சேகரித்தார். நகைகளை திருடி சென்ற மர்ம நபர்கள் யார்? என்று தெரியவில்லை. இதுகுறித்து ராசிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்