கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம்

கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரிபவர்கள் நலவாரியத்தில் இணைந்து பயன்பெற விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2023-03-18 20:14 GMT

தமிழ்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் பணியாற்றும் உபதேசியார்கள், வேதியர்கள், சீஷப்பிள்ளைகள், பாடகர்கள், கல்லறை பணியாளர்கள், கிறிஸ்தவ அனாதை இல்லங்கள், தொழு நோயாளியர் மறுவாழ்வு இல்லங்களின் பணியாளர்கள் போன்றோர்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி மேம்பாட்டிற்காக கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்க அரசு ஆணையிட்டுள்ளது. இந்த நல வாரியத்தில் உறுப்பினராக சேருவதற்கான விண்ணப்பப் படிவங்களை அனைத்து மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகங்கள், மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகங்கள் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அந்தந்த மாவட்ட எல்லைக்குட்பட்ட ரோமன் கத்தோலி திருச்சபையின் பேராயர்கள் மற்றும் ஆயர்கள், புராட்டஸ்டாண்ட் திருச்சபைகள் ஆயர்கள், சினாட் ஆப் பெண்டகோஸ்டல் சர்ச்சஸ் போன்ற அங்கீகாரம் செய்யப்பட்ட திருச்சபைகளிடமிருந்து சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். மேற்காணும் திருச்சபைகளின் பரிந்துரையின் அடிப்படையில் அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரால் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். மேலும் இவ்வாரியத்தில் பதிவு செய்யும் உறுப்பினர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் ஏனைய அமைப்பு சாரா வாரியங்கள் மூலம் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் போன்றே வழங்கப்படும்.

இந்த நலவாரியத்தில் உறுப்பினராக இருப்பவர்களுக்கு 10 ஆம் வகுப்பு முதல் ஐ.டி.ஐ., பாலிடெக்னிக் படிப்பு, தொழிற் கல்வி படிப்பு வரை படிப்பவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விபத்தினால் மரணம் ஏற்பட்டால் ரூ.1 லட்சம் உதவித்தொகை, விபத்தினால் ஊனம் ஏற்பட்டால் ஊனத்தின் தன்மைக்கேற்ப ரூ.10 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை உதவித்தொகை, இயற்கை மரணம் உதவித்தொகை ரூ.20 ஆயரம், ஈமச்சடங்கு உதவித்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்படும். திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.3 ஆயிரம், பெண்களுக்கு ரூ.5 ஆயிரம், மகப்பேறு உதவித்தொகை ரூ.6 ஆயிரம், கருச்சிதைவு, கருக்கலைப்பு உதவித்தொகை ரூ.3 ஆயிரம், கண் கண்ணாடி உதவித்தொகை ரூ.500, முதியோர் ஓய்வூதியம் (மாதந்தோறும்) ரூ.1,000 போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்பு கொண்டு, இந்நலவாரியத்தில் தகுதியுடைய நபர்கள் உறுப்பினராக சேர்ந்து பயன்பெறலாம், என்று பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்