வேலூர்: ரங்க ராட்டினம் சரிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயம்

வேலூர் அருகே கோவில் திருவிழாவில் ரங்க ராட்டினம் சரிந்து விழுந்ததில் 2 சிறுவர்கள் படுகாயமடைந்தனர்.

Update: 2022-06-07 02:33 GMT

வேலூர்:

வேலுர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகே உள்ள பல்லல குப்பம் கிராமத்தில் நேற்று கெங்கையம்மன் திருவிழா நடந்தது. இந்த திருவிழாவின் போது ராணிப்பேட்டை மாவட்டம் ஓச்சேரி சேர்ந்த லோகநாதன் என்பவர் ரங்க ராட்டினம் அமைத்திருந்தார்.

நேற்று மாலை 6.45 மணியளவில் இந்த ரங்க ராட்டினத்தில் பல்லல குப்பம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பெண்கள், இளைஞர்கள், சிறுவர்கள் என 50 க்கு மேற்பட்டோர் பொழுது போக்குக்காக ஏறி அமர்ந்திருந்தனர். அப்போது ரங்க ராட்டினத்தின் நடுப்பகுதியின் ஆக்சல் எனப்படும் அச்சு முறிந்து ரங்க ராட்டினமானது ஒரு பக்கமாக சரிந்தது.

அப்போது டமாரென சத்தம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால் திருவிழாவிற்கு வந்த பக்தர்கள் அலறி கூச்சலிட்டனர். ரங்க ராட்டினம் ஒரு பக்கமாக சரிந்ததில் யாருக்கும் உயிர் சேதம் ஏதும் ஏற்பட வில்லை.

இந்த விபத்தில் பல்லல குப்பம் கிராமத்தை சேர்ந்த சபரீசன் (10) , செண்டத்தூர் கிராமத்தை சேர்ந்த சைதன்யா (11) ஆகிய 2 பேர் படுகாயமடைந்தனர். உடனடியாக இருவரும் குடியாத்தம் அரசு மருத்துவமனை, மேல் பட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது சம்மந்தமாக பேரணாம்பட்டு வருவாய் துறையினர், மேல் பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்